Monday, December 28, 2020

இசையுறு பந்தினைப் போல்….

 இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்….

                                                                                          – எஸ் வி வேணுகோபாலன்

மிக நீண்ட கட்டுரை, கடந்த வாரத்தில், பொறுமையோடு வாசித்து, அதன் மீது கருத்துகளும், வாழ்த்தும், பாராட்டும், அன்பும் பொழிந்தவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகிறது.  

மறைந்த இசை மேதை எம் பி சீனிவாசன் அவர்களை நினைவு கூர்ந்த விதம் பற்றி, சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவின் பொறுப்பாளர், திரு டி ராமச்சந்திரன் அவர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் நெகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.  அர்ப்பணிப்பு மிக்க முறையில் இசைப்பயணம் தொடரும் அவரைப் போன்றோரது உள்ளன்பு வணக்கத்திற்குரியது. 

அண்மையில், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில், இசைக்கவி ரமணன் அவர்களுக்கு விருது வழங்கிய மேடையில், டி ராமச்சந்திரன், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்த்தியுள்ள உரை உள்ளிட்டு யூ டியூப் இணைப்பை, தோழர் முகமது இக்பால் அனுப்பி இருக்கிறார். 

பாரதி கவிதை வரிகளின் பொருள், ஆவேச உணர்ச்சி, பாவம் இவற்றை அப்படியே பாடலில் கொண்டுவர வேண்டும் என்று எம் பி எஸ் மேற்கொண்ட பாடுகள் பற்றிய குறிப்புகள் தெறித்த உரை அது.  அதில் ஓரிடம் மிகவும் கவர்ந்தது. 

‘ஓடி விளையாடு பாப்பா பாடலை இரண்டு மூன்று சரணங்களோடு பாடி முடித்துக் கொள்கின்றனர், ஆனால், அந்தப் பாடலின் உயிர் நாடி, பாதகம் செய்பவரைக் கண்டால் என்ற சரணம் தான்…என்று குறிப்பிடுவாராம் எம் பி எஸ்.  ‘பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா’ என்ற வரியை  அதற்கே உரிய அழுத்தம் திருத்தமாகப் பாடிவிட்டு, ‘மோதி மிதித்து விடு பாப்பா’ என்பதை மூன்று முறை மேலும் வலுவாக உரத்துப்பாட வேண்டும், பின்னர், ‘அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா’ என்று முடிக்க வேண்டும் என்பார். அப்படி பாட முடியவில்லை எனில், அந்தப் பாடலையே எடுக்க வேண்டாம் என்றே சொல்வாராம்.  பாடலைப் பாடும் அரங்கில் யாரேனும் பாதகம் செய்பவர் அமர்ந்திருந்தால், அவர் கைக்குட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்ளும் படி இருக்க வேண்டும் நாம் அதை இசைப்பது என்பாராம் எம் பி எஸ்.    

சட்டம் இயற்றும் இடங்களில், அதிகார பீடங்களில், அடக்குமுறை தர்பார்களில், சாதாரண மக்கள் வாழ்வாதாரத்தோடு விளையாடும் செல்வாக்கு மிகுந்த அராஜக வாதிகள் சபைகளில், இன்னும் இம்மாதிரியான மன்றங்களில்  இந்தப் பாடலை உடனே எண்ணற்றோர் சூழ்ந்து நின்று சேர்ந்திசையாக ஒலிக்கவேண்டும் என்று தோன்றியது. உடனே, அதைத்தானே, பஞ்சாப் விவசாயிகள் இப்போது தலைநகரில் முற்றுகையிட்டு செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பட்டது.

‘பகத் சிங் வாரிசுகள் தான் தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனர்‘ என்று நிறைய வாட்ஸ் அப் செய்திகள் பார்க்கிறோம். எம் பி சீனிவாசன் இசையில், எப்போது நினைத்தாலும் உலுக்கி எடுக்கும் அந்தப் பாடலைத்தான் இணையத்தில் தேடிக்கிடைக்கவில்லை என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.  அறிமுகம் கிடைத்ததும், சேர்ந்திசைக் குழுவினரிடம் கேட்கையில், தொகுப்பில் இருந்து எடுத்து அனுப்பி வைக்கிறோம் என்றும், எம் பி எஸ் பாடல்களுக்கு எல்லாம் காப்புரிமை கிடையாது, அவை சமூகத்தின் சொத்து என்றும் செய்தி அனுப்பி இருக்கிறார் திரு டி ராமச்சந்திரன். 

பாரதி விழாவில் அவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து அந்தப் பாடலும், ஒளி படைத்த கண்ணினாய் பாடலும் சேர்ந்திசை குழுவினர் இசைப்பதை அந்த நிகழ்வில் ஒளிபரப்பி இருப்பதைப் பார்க்க முடிந்தது. 

சில ஆண்டுகளுக்குமுன்பு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களிடம் இந்த எழுச்சிகரமான பாடலை எப்போது எழுதினீர்கள் என்று கேட்டது நினைவில் இருக்கிறது. எம் பி எஸ், திடீர் என்று பகத் சிங் பற்றி பாடல் வேண்டும் என்று எங்கள் நட்பின் காரணமாக நேரே வீட்டுக்கே வந்துவிட்டார், அவர் விரும்பிய விதத்தில், அவருக்கேற்ற மெட்டுக்கு, நாற்பது நிமிடங்களில் தயார் செய்த இசைப்பாடல் அது என்று சொல்லி அசர வைத்தார். 

வைகறை கோவிந்தன்

‘வானம் மூடிய காரிருள் மெல்ல அதிர்ந்தது, ஒரு காலடி ஓசை எந்தன் காதில் விழுந்தது….யாரிவர்…என் நேரினில் …பார்வைத் தேரினில்…இருள் வேளையில்… .’ உடனே, கோரஸ் குரலில், உரத்து, ‘யாரிவர்?’  ஒரு சின்ன இடைவெளி. பின் ஒட்டுமொத்தக் குரலில், ‘கோடி எரிமலை, ஆடும் அலைகடல், ஈடு இணையிலாத எங்கள் பகத் சிங், எங்கள் பகத் சிங்……ஹா….ஹா…ஹா…..ஹா….. ‘

சிலிர்க்க வைக்கும் அந்த இசைப்பாடலின் கடைசி சரணத்தை, ஆயிரம் முறைக்குக் குறையாது யாரிடமாவது பித்துப் பிடித்தது போல் சொல்லியும் வேட்கை அடங்கவில்லை…. 

‘கனவுக் கொடியில் கொய்ததல்ல சுதந்திரம் – பல

தியாகம் செய்து பறித்து வந்த மலரிது – ஒரு

தானமாகக் கிடைத்ததல்ல சுதந்திரம் – உயர் 

மானம் கொண்டோர் மரணம் தந்த பரிசிது‘


எம் பி எஸ் அவர்களது இசையில் இந்தப் பாடலுக்கும், ஒளி படைத்த கண்ணினாய் என்ற பாரதி பாடலுக்கும் டி. ராமச்சந்திரன் அறிமுகம் செய்வதும் சேர்த்து அந்தக் காணொளியில் நீங்கள் காண முடியும். 

தொண்ணூறுகளில், புதிய தாராளமயக் கொள்கைக்கு எதிரான பிரச்சார மேடைகளில், கலையார்வம் கொண்ட வங்கி ஊழியர்கள் இணைந்து நாடகங்கள் போடத் தொடங்கினர். அருமையான கவிஞர்கள் களத்தில் உருவாக்கினர். நம்மூர் வேப்பிலை, மஞ்சள் எல்லாவற்றுக்கும் அமெரிக்கா காப்புரிமை கோரும் என்கிற அபாயம் சூழ்ந்த காட் உடன்பாடு குறித்து காட்டமான முறையில் அம்பலப்படுத்தி, பாரத ஸ்டேட் வங்கி தோழர் சிபி ரவிசங்கர் எழுதி இசையமைத்த நினைவில்  அதிலிருந்து சில வரிகள்:


ஆலும் வேலும் பல்லுக்குறுதி 

அவ்வைப் பாட்டி சொன்ன மொழி 

அதுக்கும் கூட வரி தரணும்னு 

அமெரிக்காக்காரன் சொல்றாங்க

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லேன்னு

அம்மாஞ்சி தாத்தா சொல்வாங்க 

அதுக்கும் கூட வரி தரணும்னு 

அமெரிக்காக்காரன் சொல்றாங்க 


வங்கி ஊழியர் கலைக்குழு (பீட்) தமிழகத்தில், குறிப்பிடத்தக்க சேர்ந்திசைக் குழுவாக மலர்ந்தது, எம் பி சீனிவாசன் அவர்களது மாணவி, ஆசிரியை ராஜராஜேஸ்வரி அவர்களது பயிற்சியில், பல்வேறு வங்கிகளில் பணியாற்றும் பாடகர், பாடகியர், இசைக் கலைஞர்கள் ஒரு மாலையாகத் தொடுத்து வழங்கியதைப் போன்ற குழு அது. எம் பி எஸ் அவர்களது இசையமைப்பில் விளைந்த தீஞ்சுவைக் கனியமுதம் பலவும் பீட் குழுவினரின் இசையிலும் பொழிந்தது. கே சி எஸ் அருணாச்சலம் அவர்களது ‘பாடும் பறவைகளே, பறந்தென் தோளில் அமர்ந்திடுங்கள்‘ தொடங்கி சிறப்பான இசையை, எத்தனையோ மேடைகளில் வழங்கியது மறக்க முடியாதது.  பீட் இசைக்குழுவின் அமைப்பாளராகவும் சி பி ரவிசங்கர் ஆற்றிய பங்களிப்பு அற்புதமானது.

அக்டோபர் 5, 1997 தேதி அதில் மகத்தானது. அது இந்திய சுதந்திரத்தின் பொன்விழா ஆண்டு. 50 குழந்தைகள் பாரதி பாடல்கள் இசைத்தனர். அதுவும், மகாகவியாகவே உடையணிந்து முண்டாசு கட்டி ! அதுவும், அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணி இல்லத்திலேயே! அதுவும், பாரதி பாடல்கள் என்றாலே நினைவில் நிற்கும்  அற்புத  இசைவாணி டி கே பட்டம்மாள் ஆனந்தத்தோடு பார்க்க! அதுவும், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற மாதர் சங்கத் தலைவர் பாப்பா உமாநாத் பரவசத்தோடு பாராட்ட!  

சிறார்களை உற்சாகத்தோடு தட்டிக்கொடுத்து பிசிறு இல்லாது, சுருதி விலகாது, தாளம் தப்பாது கொண்டாட்டமாகப் பாடுவதற்கான தொடர் பயிற்சி அளித்து அன்றைய நிகழ்வைச் சிறப்பாக நடத்தியவர், அப்போது இந்தியன் வங்கியில் பணியாற்றி வந்த  தோழர் வசந்தவல்லி. 

அண்மைக் காலத்தில் பண்பாட்டுக் களத்தில் செயலாற்றி வந்த சில அருமையான மனிதர்களை இழந்து விட்டது சமூகம். சிறப்பான பாட்டுக்காரன் வைகறை கோவிந்தன், சாரட்டு வண்டி நினைவுகளாகி உறைந்து விட்டார் நெஞ்சில்.  

கருப்பு கருணா

இயலிசை நாடகக் கலைஞர்களை, முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்வுக்காகச் செல்லும் நேரத்தில், மேடையில் அறிமுகம் செய்விக்கும் போதும் சரி, ஊர் ஊராக அவர்கள் குரலைப் பரந்துபட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்போதும் சரி, அஞ்சாது கருத்துரிமைக்கான குரல் எடுத்து, ஒடுக்குமுறைக்கு எதிராகத் தோள்கள் தட்டும்போதும் சரி, எண்ணற்றோர் உள்ளத்தில் இடம் பெற்றவரான கருப்பு கருணாவும் இனி நினைவில் வாழ்பவரானது பெருஞ்சோகம். 

நாட்டுப்புற வழக்காற்றியல் ஆய்வாளர் தொ பரமசிவன் எனும் மகத்தான பண்பாக்கங்கள் கொண்ட பேராசிரியரையும் பறிகொடுத்துவிட்டோம்.

கருப்பு கருணா அவர்களது உடலை அவர் முன்னதாக தெரிவித்திருந்த விருப்பப்படி, மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்குகையில், திருவண்ணாமலை  நகரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கரிசல் குயில் கிருஷ்ணசாமி பாடியதைப் பின்னர் பேசிக்கொண்டிருக்கையில் எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். குழுமி இருந்தோர் உள்ளத்தை உருக்கி விட்ட அந்த இசை, அங்கே இருந்தோர் எல்லோரையும் உடைந்து அழும் வண்ணம் நெகிழ வைத்துவிட்டது என்றார்.

தொ பரமசிவன்

மகாகவியின் ‘நல்லதோர் வீணை செய்தே, அதை நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ‘ என்பது தான் கிருஷ்ணசாமி அங்கே இசைத்த பாடல்.  கேள்விப்பட்டதும் அழைத்து அன்போடு கேட்டுக் கொண்டதும் ,அலைபேசியில் அந்தப் பாடலைப் பாடி அந்த இரவு நேரத்தை  நனைத்தார் கரிசல் குயில். அடடா…அடடா….. எப்பேற்பட்ட இசைக் கலைஞர் என்று மீண்டும் நனைந்தன கண்கள்.  

இதுவரை கேட்டதிலிருந்து வேறு தினுசான மெட்டில்  அமைந்திருந்தது. ‘மழையின் தாளம் கேட்குது…’ நினைவுக்கு வருதா, சம்போ பாடல் நினைவுக்கு வருதா‘ என்று கேட்டார் குயில். பின்னர் அவரே புதிர் அவிழ்த்து, ரேவதி ராகத்தில் அமைத்த மெட்டு என்றார். இசைக்கவி ரமணன் முன் ஒருமுறை பாடுகையில், எத்தனையோ மெட்டுக்களில் கேட்டதுண்டு, ஆனால், இந்த ராகத்தில் அமைந்தது, இந்தப் பாடலுக்கு உன்னதமான இசை என்று நெகிழ்ந்து போனாராம் அவர். ஒவ்வொரு மெட்டும், பாரதியின் கவிதை வரிகளின் மேன்மையை இன்னுமின்னும் அருகே நெருங்க அழைக்கிறது.

கள்வனின் காதலி படத்திற்காக, கோவிந்தராஜூலு, கண்டசாலா இசையமைப்பில், பன்முக ஆளுமையான பி பானுமதி, ‘நல்லதோர் வீணை செய்தே‘ பாடியதைக் கேட்கையில் உள்ளத்தை என்னவோ செய்கிறது. ஆஹா….ஆஹா..

அவரது இசை ஞானம் பாடலின் முக்கிய பகுதிகளில் பயணம் செய்யும் குரலில், அருவியை மிகவும் அருகே சென்று பார்க்கையில், பெருக்கெடுத்து மேலிருந்து விழும் நீரின் வேகம் ஒருபுறம் இருக்க, பாறைகளின் இடுக்குகள் வழியே உள்ளே நுழைந்து தனக்கான பாதையை நெளிந்து செல்லும் நாகத்தைப் போலவே அமைத்துக் கொண்டு இறங்கி வரும் நீர், கற்களை மாசு துடைத்துப் பளிங்காக ஆக்குவதோடு அவற்றை மென்மையாக  இளக்கிக் கொடுத்தபடியே தரைக்கு வந்தடைவதைப் போலவே மனங்களில் புகுந்து வெளியேறுகிறது. 

‘விசையுறு பந்தினைப் போல்’  உள்பட எல்லாச் சரணங்களும் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.  ‘நலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற கவி வாக்கியத்தை எப்படியப்பா எழுதினாய், எங்கள் பாரதி! 

இசை, துயரங்களைக் கடத்துகிறது, கடக்கவும் உதவுகிறது. மகிழ்விக்கிறது. நெகிழ்விக்கிறது. தோழர் ரகுபதி (கனரா வங்கி) மிகப் பழைய பாடல் ஒன்றை அனுப்பிக் கேளுங்கள் என்றார்.  

பாதசாரி என்ற தெலுங்குப்படம், தமிழில் கானல் நீர் என்ற பெயரில் 1961ல் வந்திருக்கிறது. சமுத்ரால ராகவாசார்யா எழுதிய பாடலை, கண்ணதாசன் அழகான தமிழில் கொண்டு வந்த ‘கண்ணில் தெரிந்தும் கைக்கு வராத கானல் நீருண்டு‘ பாடல், மாஸ்டர் வேணு இசையில் ஜிக்கியும் பானுமதியும் பாடியது என்று வலைப்பூ ஒன்றிலும் குறிப்புகள் இருக்கின்றன. 

உண்மையில், பி பானுமதி அவர்களுக்கு மிகச் சிறந்த நடிப்பிற்காக  ஃபிலிம் ஃபேர் விருது பெற்றுத் தந்த இந்தப் படம், அவருடைய கணவர் இராமகிருஷ்ணா அவர்கள்,  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் எடுத்தது. 

தி இந்து ஆங்கில நாளேட்டில், அந்தக் காலத்திய திரைப்படங்கள் குறித்த  தமது நுட்பமான தொடரில், எழுத்தாளர் ராண்டார் கை சிறப்பாக எழுதி இருக்கும் கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும்  ( https://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaanal-neer-1961/article4727300.ece )

சரத் சந்திர சாட்டர்ஜி எனும் மகத்தான வங்க எழுத்தாளருக்கு, மிகவும் தொடக்க காலத்தில் பெரும்புகழ் பெற்றுத் தந்த அவரது ‘படீ  தீதி‘ (அக்கா) எனும் சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இளம் வயதில் விதவை ஆகிவிட்ட பெண்ணுக்கு ஏற்படும் காதல் உணர்வைக் குறித்த படம், அப்போதைய திரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தால், சரியாக எடுபடாமல் தோல்வி அடைந்தது என்கிறார் ராண்டார் கை.  படத்தின் இசை, பி பானுமதி என்கிறது அவரது கட்டுரை.  ஆனால், மாஸ்டர் வேணு எனும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் பெயர்தான் இணையத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதைக்கருவை அசாத்தியமாக எப்படி இத்தனை எளிய வடிவில் பாடலாகப் புனைந்தார் கண்ணதாசன் என்ற வியப்பு அடக்க மாட்டாதது. 

 ‘அழகைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் அழிவையும் ஏன் படைத்தான்/ ஒலியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் ஊமையை ஏன் படைத்தான்?  விழியைப் படைத்தவன் கடவுளென்றால் அவன் குருடரை ஏன் படைத்தான்..’ என்று போகிறது பாடல். ஜிக்கியின் குரலில் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு, பி பானுமதியிடமிருந்து, ‘அன்றைய முதலாய் இன்றைய வரைக்கும் யாருக்கும் புரியவில்லை!ஆயிரம் வேதம் சாஸ்திரம் இருந்தும் கேள்விக்கு பதிலில்லை‘ என்று பிறக்கும் பதில், ‘வாழ்க்கை எல்லாம் வெறும் கேள்வி மயம், இதில் வளர்ந்தது சமுதாயம், வந்ததன் பின்னே கேள்வியிலே வாழ்வது தான்  நியாயம்!’ என்ற இடத்தில் போய் நிலைகொண்டு விடுகிறது.

தேவிகாவின் துயரம் தோய்ந்த சமாதான பாவங்களும், பானுமதியின் துணிவும் ஏக்கமும் ஒரு சேர வெளிப்படும் முகமொழியும் பாடலின் கனத்தைக் கூட்டுகின்றன. ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே, இங்கு, வேரில் பழுத்த பலா‘ என்றாரே பாவேந்தர், வேறென்ன சொல்ல! 

மகத்தான படைப்பாளிகள் கதையை, கவிதையை, கலையை செதுக்குகின்றனர். கருப்பொருளை வாழ்க்கையிலிருந்தே எடுக்கின்றனர். சமூகத்திற்கே படைக்கின்றனர். உள்ளத்தைத் தைக்கிறது, நடுங்க வைக்கிறது, சிலிர்ப்புறச் செய்கிறது என்றெல்லாம் பின்னர் வாசகரும், ரசிகரும் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுகின்றனர். இதில் இசை கலக்கும்போது, விவரிப்புக்கு அப்பாற்பட்ட உணர்வுக்குள் தங்களைத் தாங்களே தொலைத்துவிடுவதும், தேடுவதும், கண்டடைந்து திணறுவதுமாக வேறு தளத்தில் நிகழ்கிறது வேதியியல். 

(இசைத்தட்டு சுழலும் ….)

Saturday, March 16, 2013

Chorusing for a cause



ANUSHA PARTHASARATHY tracks the origins and growth of the Madras Youth Choir, the oldest Indian choral music group
Over the last 42 years, a motley group of people have met every Sunday and practised their singing, ‘come rain or sun’. Together, they have kept alive the spirit of the oldest Indian choral music group, the Madras Youth Choir.
“It’s not a choir in the literal sense,” says D. Ramachandran, secretary. He joined the group a few months after its inception and has been its secretary since 1974. “This is a new genre where you combine Indian classical music with western techniques such as chord singing, harmony and so on.”
The first among such groups was the Indian People’s Theatre Association, which was active in the pre-Independence and post-Independence days and had the likes of Pandit Ravishankar, Bijon Bhattacharya, Utpal Dutt and Jyotirindra Moitra. “They sang songs on national integration, secularism, human values, rights, lullabies and folk numbers,” reminisces Ramachandran, “And they performed on stage and street corners. M.B. Srinivasan, who was among the pioneers of Indian choral music along with Vasanthi Devi, then Vice Chancellor of Manonmaniam University, K.S. Subramanian, and Zahida Srinivasan began a youth choral group for a programme on the All India Radio.”
This choral group, called Bharathi Ilangnar Isai Kuzhu, was formed in 1971 and its radio show, Ilaya Bharatham, was well received. “M.B. Srinivasan was the composer-director and trained people to sing songs on peace, love and patriotism. He took the songs of national poets such as Subramanya Bharathi, Sir Muhammed Iqbal, Daasaradhi Krishnamacharyulu and set them to music. He then choralised the compositions, which became popular among the public, especially the youth,” he adds.
In order to spread the movement, the group concentrated on folk and secular songs. “He collected lyrics from 14 languages and composed and trained the group to sing them. This made the AIR establish regional AIR choral groups in Delhi, Bombay, Calcutta and Madras. And here, Srinivasan was made the director,” says Ramachandran. The choir travelled to rural areas of Tamil Nadu and Kerala and trained children and youth groups there.
Between 1974 and 1981, Srinivasan composed about 165 pieces for AIR. “Soon, the group, the Madras Youth Choir (MYC) now, was also recognised by the NCERT to give training to school children. So, they helped schools establish groups, teach and train them in voice culture. A lot of the schools we were associated with still carry on the tradition.”
M.B. Srinivasan received the FIE Award for Creative Excellence in Choral Music in 1976 and the Sangeet Natak Akademi Award in 1987 for his contribution to choral singing and mass singing. The MYC continues to train students and even conducts workshops and annual competitions in choral music. “We have been receiving grants from the Sangeet Natak Akademi for 20 years now,” says Ramachandran. K.S. Subramanian is now the president of the choir, after Srinivasan passed away in 1988.
The MYC initially began with 30 passionate singers, who came from various walks of life. Now, the group has 26 committed members who assemble every Sunday to rehearse. “People keep changing because this is not their profession, only passion,” he says. “They move away, change jobs and so we have to induct new members. Currently we have 12 men and 14 women and we practise between 3.30 p.m. and 6 p.m. at Children’s Garden School, whether it rains or shines.”
While the group is accompanied by a tabla and harmonium, the stress is on the vocals. “It’s not just group singing and we don’t usually sing cinema songs. We mostly perform Srinivasan’s compositions and also of other composers.”
MYC and its sister group in Kerala, MBS Youth Choir (named after Srinivasan) work together to keep Indian choral music alive. “We still have three of our founding members on board. Our love for singing, passion for music and our commitment to spread this form are the driving force.”
M.B. Srinivasan was the composer-director and trained people to sing songs on peace, love and patriotism

- The Hindu dt 06/03/2013

Wednesday, August 24, 2011

தூரே தூரே தூரே

இசை: M B சீனிவாசன்

தூரே தூரே தூரே தூரே
தூரே தூரே தூரேயுண்டொரு ஷ்யாம சுந்தர தீரம்
கேர விருக்ஷ சுந்நரிகள்
காவல் காக்கும் தீரம் சுந்நர தீரம்

மாமலையில் பூமலையில்
தலைசாய்க்கும் மலையாளம்
மாபலி தன் ஆகமத்தே
வரவேற்கும் மலையாளம் ‍ தூரே தூரே

மணிமேடகள் மாடங்கள்
வயலேலகள் நகரங்கள்
களிசிறியுடே மேளத்தால்
நவ புளகம் சூடுன்னு

தையகம் தையகம் தாரோ
தையகம் தையகம் தாரோ

சின்னப்பொன் சில்லகளில்
பொன் கிளிகள் பாடுன்னு

பாடுன்னு பாடுன்னு பாடுன்னு

அங்ஙனமார் கள மொழிகள்
கைகொட்டி பாடுன்னு
பாடுன்னு பாடுன்னு பாடுன்னு


தையகம் தையகம் தாரோ
தையகம் தையகம் தாரோ

மானவனும் மானவனும்
சமமென்ன சந்தேசம்
ஓர் மகளில் ஓடிவரும்
மாபலி தன் சந்தேசம்
ஸ்மரணங்களில் தெரியுன்னு
கேரளபூ உணருன்னு
மல நாடின் ஹ்ருதயத்தில்
பொன்னோணம் புலருன்னு தூரே தூரே

Thursday, July 7, 2011

Musical Confluence at Singapore

BEAT and Temple of Fine Arts choir performance on 2nd July, 2011 Saturday at Jubilee Hall of Raffles Hotel, Singapore

Friday, February 4, 2011

சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் ‍ ..... (2)

சென்ற நூற்றாண்டின் பெரும்பகுதி பரந்துபட்ட பாரதம் முழுவதும் தனியாராட்சி செய்துவந்த அனைத்திந்திய வானொலி இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்ந்திசை இயக்கம் வேர்பிடித்து வளர்ந்தது. டெல்லியில் சதீஷ் பாடியா, சென்னையில் எம் பி எஸ். இவர்கள் இயக்கத்தில் சேர்ந்திசைக் குழுக்களை அங்கீகரித்து ஆதரவு நல்கியது வானொலி. புதிய பாடல்கள், புதிய குழுக்கள், பல்வேறு மாநிலங்கள் என்று இந்த இயக்கம் விரிவு படத் தொடங்கியது. அன்னை இந்திராவும், ஐ கே குஜராலும் இதன் ஆதர்சத் தலைவர்களாயினர்.

சேர்ந்திசையின் மிகப்பெரிய பயன் வேறுபாடுகளற்ற சமூக சங்கமத்திற்கு வழிவகுப்பது. சீருடை, சம அந்தஸ்து, சம் வாய்ப்பு, சமூகத் தீமைகளுக்கெதிரான குரல் என்பன போன்ற நடைமுறைச் செயல்பாடுகளினால் மானுட மேம்பாடு சாத்தியப்படுவதாயிற்று.

எம் பி எஸ் 1970 ஆம் ஆண்டு சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழுவை தொடங்கினார். சென்ற 40 ஆண்டுகளாக இக்குழு சோர்வில்லாமல் தனது பணியைச் செய்துவருகிறது.

சேர்ந்திசை என்பது என்ன? எம் பி எஸ்ஸின் தனிப் பங்களிப்பு என்ன? இன்றென்ன? நாளை என்ன?

நாலு பேர், நாற்பது பேர் கூடி நின்று பாடுவதல்ல சேர்ந்திசை. ஒவ்வொருவரின் தனித்தனி குரல் தன்மையை ஒட்டி அவரவர்கென்று ஓரிடம் தந்து, பாடலின் தன்மைக்கும் தாத்பரியத்துக்கும் ஏற்ப வாய்ப்பு தந்து இசையமைத்து பாடச் செய்வதே சேர்ந்திசை.

மேலை நாட்டில், நமது குரலை சொப்ரானோ (soprano) ஆல்டோ (alto) டெனார் (tenor) பாஸ் (boss) என்று முதலில் வகைப்படுத்துவார்கள். இந்த நாலு வகைகளையும் சொப்ரானோ .. 1, சொப்ரானோ .. 2, உச்ச டெனார், நடு டெனார் எனச் சேர்த்து எம் பி எஸ் ஆறுவகைப்படுத்துவார்.

குழுவில் உள்ளோர்க்கு இந்த ஆறுவகைப்படி இடமளிக்கப்படும். பாட்டின் இசைக்கு ஏற்ப அவரவர் பங்களிப்பு இருக்கும். தனிக்குரல் ஒலிப்பு, வகைக் குழுவின் ஒலிப்பு, ஒட்டுமொத்தக் குழுவின் ஒலிப்பு என வண்ண மயமாய் அமைவதே சேர்ந்திசை.

எம் பி எஸ் என்ற மேதையின் தனிப் பங்களிப்பு இந்த சேர்ந்திசை வகையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றதுதான். பாடலின் ஜீவனுக்கேற்ற இசை, குரல் வகைகளுக்கேற்ப வித்யாசங்களுக்கு வழியமைத்தல், மனிதக் குரலே மகத்தான இசைக்கருவி என்பதை உணர்ந்து பக்க வாத்தியங்கள் இல்லாமலேயே பாட்டை ஜொலிக்கச் செய்தல் இவைதாம் எம் பி எஸ்ஸின் சாதனைகள். சான்று: 'மழை' பாட்டு. சேர்ந்திசையை புதிய சிகரங்களுக்கு கொண்டு சென்றது அவரது ஆளுமையே!

எத்தனையோ இந்திய மொழிகளில் சேர்ந்திசைப் பாடல்கள் செய்திருக்கிறார். அந்த மேதை சொன்னார்: "பாட்டின் உள்ளே இருந்து பாடு. குழந்தையைப் பற்றிப் பாடவேண்டுமானால் குழந்தை உன் மடியில் இருப்பதாக எண்ணிப் பாடு. அம்மாவைப் பற்றிய பாட்டா, உன அம்மாவை நினைத்துக் கொள். 'ஒளிபடைத்த கண்ணினாய்' என்று பாடினால் அந்த மின்னல் உன் கண்ணில் தெறிக்கவேண்டும். பாப்பா பாட்டில் 'காறி உமிழ்ந்துவிடு' என்ற வரி வரும்போது எதிரில் அநியாயம் செய்பவர் யாரேனும் இருந்தால் தன்னையறியாமல் தன் முகத்தை அவசரமாகத் துடைத்துக் கொள்வதைப் பார்க்கலாம்" என்பார்.

எம் பி எஸ் கம்பீரமானவர். இந்த ஆளுமையை இன்றும் எம் ஒய் சி குழுவிலுள்ளோரிடம் பார்க்கலாம். சேர்ந்திசைத் தவத்தை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒத்திகையின் மூலமும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் தக்கவாறு இயற்றிக்கொண்டிருக்கிறார்களே! எம் ஒய் சியின் இன்றைய நடத்துனர்கள் டி ராமச்சந்திரன், லதா உன்னிகிருஷ்ணன், சுதா ராஜா இன்னும் பலர்.

எம் பி எஸ் இடதுசாரி இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். சமூக சீர்திருத்தம் என்பது வாய்ப்பேச்சாக இல்லாமல் புரட்சித் திருமணம் செய்து நிரூபித்தவர். சித்தூரில் 1925 செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்த மானாமதுரை பாலகிருஷ்ணன் சீனிவாசன் ஜாகிதா கிட்ச்லு என்ற காஷ்மீரத்து முஸ்லீமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர். ஆதர்ச தம்பதியாக இருந்தவர்கள். மனைவி ஒரு விடுதலைப் போராட்ட வீரரின் மகள். இவர்களது திருமணம் பண்டித நேரு தலைமையில் நடந்தது. அந்த அற்புத தலைவனுக்கு பின்னாளில் கே சி எஸ் அருணாசலம் எழுதிய 'சிவந்த ரோஜா'வைக் கொண்டு சங்கீதாஞசலி செலுத்தினார்.

எம் பி எஸ்ஸின் சேர்ந்திசைக்கு முதல் மரியாதை அளித்த அகில இந்திய வானொலி இன்று எனோ பாராமுகமாக இருக்கிறது என்று சேர்ந்திசை அன்பர்கள் வருத்தப்படுகிறார்கள். தூர்தர்ஷன் குறித்தும் அந்த வருத்தம் இருக்கிறது. மாறிவிட்ட கலாசார சூழலில் சின்னத் திரை போன்ற சிருங்காரச் சாதனங்கள் ‍ தூர்தர்ஷன் நீங்கலாக சமுதாயத்தை சீரழித்தே தீருவது என்று சூளுரைத்துக் கொண்டு வீராவேசமாய் சுற்றி சுழன்று வருகிற இன்றைய சூழலில், நாலு காசு சம்பாதித்தாக வேண்டும் என்கிற நிர்பந்த சூழலில் அகில இந்திய ரேடியோவும் தூர்தர்ஷனும் சேர்ந்திசைக்குப் பழைய ஆதரவை தந்துதவ முடியாமல் இருக்கலாம். இதை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

எம் பி எஸ் சேர்ந்திசையை மக்கள் இயக்கமாகத்தான் பார்த்தார். அதன் வழியாக கடைக்கோடி மக்களுக்கு அறிவூட்டவும் மானுடனேயம் ஆழ்ந்த வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தவும் ஆசைப்பட்டார். வெகுஜன ஊடகங்களாய் அகில இந்திய வானொலியும் தூர்தர்ஷனும் தமது பங்கைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்ந்திசைக் குழுக்கள் அமையவேண்டும் என்று விரும்பினார். இதில் அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் கோவை 'பெர்க்ஸ்' குழுமப் பள்ளியின் நிறுவனர் தாளாளர் அமரர் இராம அரங்கநாதன். பெர்க்ஸ் பள்ளியில் எம் பி எஸ்ஸின் சேர்ந்திசை நிகழ்ச்சிகளும் பயிற்சிப் பட்டறைகளும் பல் நடந்தன.

1984 நவம்பர் 24, 25 தேதிகளில் கோவை வானொலியும் பெர்க்ஸ் பள்ளியும் இணைந்து ஏறக்குறைய 400 மாணவர்கள் இசை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தினோம். எம் பி எஸ் இரண்டு நாட்களும் முன்னிருந்து நடத்தித் தந்தார்.

கேரளத்தில் சேர்ந்திசை இயக்கம் ஓரளவு செம்மையாக நடந்து வருகிறது. சர்மா என்ற சமூகத் தொண்டர் தொடங்கிவைத்த நற்பணி.

எம் பி எஸ் பன்முகப் படைப்பாளி, திரைப்பட இசை அமைப்பாளராகப் பரிணமித்தார். அவர் இசை அமைத்த 'பாதை தெரியுது பார் திரைப்படம் எல்லா வகையிலும் ஒரு முன்னோடிப் படம். இசையமைப்பில் அவர் செய்த புதுமைகள் ஒரு முன்னோடி சரித்திரம். மலையாளத் திரை உலகம் அவரது மேதாவிலாசத்தை மதித்துப் போற்றியது. எம் பி எஸ் நடித்து இயக்கிய 'அக்ரஹாரத்தில் கழுதை' கலைப் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்த படம்.

பல மொழிகள் அறிந்தவர். சுய நலமே இல்லாதவர். திரையுலகத் தொழிற்சங்க இயக்கத்தில் பங்கேற்று பணி புரிந்தார். அந்த துறைக் கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் 'உடனுகுடன் ஊதியம்' என்ற உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவர்.

இந்திய சமூகத்தின் ஒருமித்த அஞ்சலிக்கு உரியவர் எம் பி எஸ், ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும் சம்பிரதாய அஞலி அல்ல. மானுட நேயம் போற்றும் சேர்ந்திசையை இயக்கமாக்குதலும் அவர் சொன்னதைபோல 'பாட்டுக்குள்ளிருந்து பாடு'தலுமே அவரது ஆன்மாவைக் குளிர வைக்கிற அஞ்சலிகள்.

நன்றி: அமுத சுரபி ஜனவரி 2011,

Saturday, January 8, 2011

சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் ...... [ 1 ]

‍_ விஜய திருவேங்கடம் (அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குனர்)
_ நன்றி 'அமுத சுரபி' ஜனவரி 2011

1965 இல் வெளிவந்து உலகமெங்கும் திரைப்பட ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் ஆஸ்கார் போன்ற விருதுகளையும் குவித்த 'சவுண்ட் ஆஃப் மியூசிக்' ஆங்கிலத் திரைப்படம் நினைவிருக்கலாம். இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் திரை வடிவம்; உணர்ச்சிக் காவியம். நடந்ததற்கும் நடந்ததாகச் சொல்லப்பட்ட திரைக் கதைக்கும் வெகு தூரம் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன. அது வேறு கதை. ஆனால் அந்த திரைப்படமும், உண்மைச் சம்பவமும் உலகத்தார் முன் வைத்த 'சேர்ந்து பாடுதல்' எனும் கலை வடிவம் பின்னாளில் ஓர் உலக சமூக இயக்கமானது குறித்தும், அந்த மாபெரும் இயக்கத்தின் இந்திய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததோடன்றி அதில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய எம் பி சீனிவாசன் எனும் சேர்ந்திசை சித்தர் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் இரண்டு போர்களில் சிக்கித் திணறியது. ஹிட்லரின் நாடு பிடிக்கும் பேராசையும், யூதரினத்தை பூண்டோடு அழித்து ஒழிக்கவேண்டும் என்ற கொடூர எண்ணமும் சேர்ந்து இரண்டாம் உலகப் போர் மூளக் காரணமாயின. ஜெர்மனிக்குள்ளும் தன் ஆக்கிரமித்த நாடுகளிலும் ஹிட்லர் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயம் ஹிட்லரின் ஆக்கிரமிப்பு வளையத்தில் ஆஸ்திரியாவும் அகப்பட்டுக்கொண்டது.

அங்கே ஆஸ்திரிய கப்பறபடைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற வான் ட்ராப் பத்துக் குழந்தைகளை பெற்றுத் தந்த தன் அன்பு மனைவியை இழந்து வாடியவர். தன் குழ்ந்தைகளுக்கு தாதியாகவும் இசை ஆசிரியையாகவும் மரியா என்ற கன்யா ஸ்திரீயை அமர்த்துகிறார்.

குழந்தைகளோ குறும்புத் திலகங்கள்! முன்னர் இருந்த ஆசிரியைகளை சொல்லாமல் கொள்ளாமல் ஓட வைத்த செல்வங்கள்! ஆனால் மரியா குழந்தைகளின் அன்பை சம்பாதித்தோடன்றி அவர்களை அடக்கத் திலகங்களாக மாற்றி அனைவரும் சேர்ந்து பாடும் சிங்காரச் செல்வங்களாகவும் செய்துவிடுகிறார். கறார், கண்டிப்புக்குப் பெயர் பெற்ற வான்ட்ராப் நன்கு பாடவும் தெரிந்தவர். பாட்டு வாத்தியாரிடம் மனத்தைப் பறிகொடுக்கிறார்.

கன்யாஸ்திரீக்குக் கல்யாணமா? தான் காதலிக்காவிட்டாலும் குழந்தைகளின் பாசத்தினால் குழம்பித் தவித்து, குருகுலத் தலைவியை ஆலோசனை கேட்கிறார் மரியா. 'அதுவே தேவனின் திருவுள்ளம் போலும்' என்று சம்மதம் தந்துவிடுகிறார் தலைவி.

வான்ட்ராப் குடும்பம் இப்போது குதூகலக் குடும்பமாகிறது. சேர்ந்திசைக் குழுவாகிறது. குழுவிற்கு ஆஸ்திரியா முழுவதும் வரவேற்பு. வெளி நாடுகளிலிருந்தெல்லாம் அழைப்புகள்.

வான்ட்ராப் ஜெர்மனிய ஆக்கிரமிப்பையும் நாஜிக் கொள்கைகளையும் அறவே வெறுக்கிறார்.

வான்ட்ராப் குடும்பத்தின் தனித்திற்மையை கேள்விப்பட்ட நாஜிக்கள் தங்களது குரூர எண்ணத்திற்கு அந்தக் குடும்பத்தைப் பயன்படுத்த எண்ணுகின்றனர். வான்ட்ராப் இசைந்திருந்தால் வான் பொருட் செல்வம் குவிந்திருக்கும். இசைய மறுத்து நாட்டைவிட்டே வெளியேறுகின்றனர் வான்ட்ராப் குடும்பத்தினர். ஒரு தேவாலய அரங்கில் பாடி முடிக்கையில் திரை விழவும் கிடைத்த இடைவெளியில் கன்யா குருகுலத்தினர் உதவியோடு மேடையின் பின் வழியே தப்பி ஓடி அழகிய ஆல்ப்ஸ் மலையின் மீதிருந்த வண்ணம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாகவும் அதை சேர்ந்து பாடி கொண்டாடியதாகவும் திரைப்படம் முடியும்.

வான்ட்ராப் குடும்பம் நாஜிக்களை எதிர்த்து நின்றதால் அவர்களே கண்ட சேர்ந்திசை ஒரு சமூக இயக்கமாக முடியும் என்பதை சோவியத் யூனியன் இனம் கண்டு போற்றியது. அதே போல் இடதுசாரி பரிசோதனையில் முக்குளித்தெழுந்த கிழக்கு ஐரோப்பா முழுவதும் அதை பின்பற்றியது.

இந்தியாவின் சேர்ந்திசை இயக்கம் கொஞசம் தாமதமாகவே தோன்றியது. ஆனால் அதன் ஆரம்பம் எம் பி எஸ் எனும் அற்புத மனிதரின் வழி காட்டலில் விமரிசையாகவே அமைந்தது.

...................... [ சேர்ந்திசை மேதை எம் பி சீனிவாசன் { 2} .. காண்க]

Friday, November 5, 2010

ஏகாதிபத்திய ஒபாமாவே .....

2010 நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு
1994 ‍ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தன்று BEAT நாடக குழு தாம்பரம் சிட்லபாக்கத்திலும், சென்னை அஷோக் நகரிலும் உள்ள வங்கி ஊழியர் குடியிருப்புகளில் நடத்திய நடை பயணத்தின்போது பாடிய பாடலை சமர்ப்பணம் செய்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அவ்வை பாட்டி சொன்ன மொழி
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

இஞ்சிக்கு மிஞ்சின மருந்தில்லைன்னு
அம்மாஞ்சி தாத்தா சொல்வாறு
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்லுறாங்க.

மஞ்சளுன்னா மங்கலமின்னு
மங்கையரெல்லாம் சொல்வாங்க‌
அதுக்குக் கூட வரி தரணும்னு
அமெரிக்கா காரன் சொல்றாங்க.

இந்தியாவை நாடு பிடிக்க
டங்கல் திட்டம் போட்டாரு
பிடிச்சா என்ன பிடிக்கடுமின்னு
நரசிம்மராவு சொல்றாறு

மானங்கெட்ட ஜாக்ஸன் என்று
கட்டபொம்மன் சொன்னாறு
எட்டப்பந்தான் என் குரு என்று
மன்மோகன்சிங் சொல்றாறு

கப்பலோட்டி சிறை சென்றவர்
செக்கிழுத்த சிதம்பரம்
பங்கு பிடித்து பணம் சேர்த்தவர்
பாவன்னா சிதம்பரம்

இப்படியே விட்டொமுன்னா
நாட்டை ஏப்பம் விடுவாங்க‌
மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து
எதிர்து நிப்போம் வாருங்க‌

குட்ட குட்ட குனிய மாட்டோம்
எதிர்த்து நின்னு எட்டி உதைப்போம்
சின்னஞ்சிறிய க்யூபாவைப்போல்
சீறிப் பாய்வோம் வாருங்க.

சமையலறைப் பெண்களெல்லாம்
அரசியலைப் பாக்கணும்
பெண்களெல்லாம் முடிவெடுத்தா
டங்கல் திட்டம் தூளாகும்

கிச்சிலி சம்பா பச்சரிசி
சோறாக்கினா ஜோருங்க ‍அதை
ஒழிச்சுக் கட்ட அடி உரத்திலே
மருந்து வச்சது யாருங்க‌?

......... சி பி ரவிசங்கர்