Saturday, November 7, 2009

சங்கீத் ஸ்வாகத் - மலேசிய ஒருமைப்பாடு

ஸங்கீத் ஸ்வாகத் நிகழ்ச்சியின் துவக்கமே லய சங்கமத்துடன் துவங்கியது. முதலில் மலேசிய‌ கலைஞர்களின் அணி தப்பட்டை போன்ற லய கருவியை ஒரே சீராகத் தட்டியவாறே அரங்கில் நுழைந்து மேடை ஏறினார்கள். அடுத்து தவில் மற்றும் உருமி மேளத்தை முழங்கியவாறே தமிழ் கலைஞர்களின் அணி வந்து மேடை ஏறினார்கள். அடுத்து சீனக் கலைஞர்கள் மேடையின் பின் புறம் வழியாக முரசு போன்ற தங்களின் கருவியை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்து முழங்கினார்கள். அவர்களின் இரண்டு ட்ராகன்கள் அரங்கத்தின் இருபுற வாயிலின் வழியாக நுழைந்து மேடையின் இரு புற படிக்கட்டுகளின் வழியே மேடை ஏறி வந்து மேளத்திற்கு ஏற்ப ஆடின. கடைசியாக பஞ்சாபி குழுவினரின் பாங்க்ரா குழுவினர் தங்களின் மேளங்களோடு முழங்கியவாறே மேடை ஏறினர். எட்டு நிமிட லய சங்கமத்திற்குப் பிறகு ஒவ்வொரு குழுவாக மேடையிலிருந்து இறங்கிச் சென்றனர். ஒவ்வொரு குழுவும் தஙகளின் கலாச்சார உடையில் வந்து முழங்கியது மலேசிய நாட்டில் உள்ள இனங்களின் ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது. இந்த ஒற்றுமையின் சாரத்தை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் காண முடிந்தது. இந்த முதல் நிகழ்ச்சியான லய சங்கமத்தை தலைமையெற்று பங்க்ரா மேளத்தை முழங்கிச்சென்ற ட்ரம்மர் சிவம் என்பவர் 'எம்' என்கிற வங்கியில் பணிபுரியும் வங்கி ஊழியர் என்பது ஒரு சிறப்பு.

இந்த முக்கிய கருத்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிலைப்பெற்று இருந்தது. சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கு மேற்கத்திய ட்ரம் வாசித்ததும், மதுரை மணி ஐயரின் மேற்கத்திய இசை குறிப்புகளில் மலேசிய சீன தமிழர் வாழும் பெருமை இந்நாட்டிற்கே என்ற வரிகளை தமிழிலும், மலேசிய மொழியிலும் சேர்த்துப்பாடியதும், மலேசிய தேசிய மலரான செம்பருத்தியை பற்றிய பாடலை மலேசிய, சீன மற்றும் தமிழ் மொழிகளில் பழைய தமிழ் படத்தில் பாடலான‌ மல்லிகை முல்லை ரோஜா என்ற மெட்டில் பாடியதும், எம் எஸ் சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம் பாடலுக்கு சீன நடன கலைஞர்களை நடனமாட வைத்ததும், இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கீ போர்டு, ட்ரம்ஸ், சீன இசைக் கருவிகளான குஷெங், ஷெங், சீன புல்லாங்குழல், மலேசிய இசைக் கருவிகளான கோர்ட் மற்றும் ரெபனா ஆகிய கருவிகளையும் சேர்த்து இசைக்க வைத்ததும் இன ஒற்றுமையை இழையாகக் கொண்டதுதான் ஸ‌ங்கீத் ஸ்வாகத் என்பதை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. ஸ்ருதிலயாவிற்கு புல்லாங்குழல் வாசித்தவர் நம்முடைய பீட் சேர்ந்திசைக்குழுவில் இருந்த, திருச்சி பெஃபி டி என் மாநாட்டின் கலை இரவில் புல்லாங்குழல் வாசித்தவருமான இன்ட் பேங்க் ஹவுஸிங்கில் பணிபுரிந்த தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ஸ்ரீதர் என்பது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சியின் கடைசி பாடலாக மலேசிய தேசிய பாடல் ஒன்றை பாடியவாறே அனைத்துக் கலைஞர்களும் மலேசியக் கொடியை அசைத்து சாய்ந்தாடி மகிழ்ந்தனர்.

No comments:

Post a Comment